பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்துப் பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகிய கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. பேரறிவாளன் உள்பட 3 பேரின் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கடந்த 4ஆம் தேதி வாதம் முடிவடைந்தது.
அப்போது, அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி வாதிடுகையில், கருணை மனு காலதாமதத்தால் மூவரும் மனஅழுத்தத்தில் இருக்கவில்லை என்றும், சிறையில் மூவரும் இயல்பான மனநிலையில் இருந்ததாகவும், மூன்று பேரும் சித்ரவதைக்கோ, மனவேதனைக்கோ ஆளாகவில்லை என்றும், கருணை மனு தாமதத்தை காரணம் காட்டி தூக்குத் தண்டனையை குறைக்க கூடாது என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக மத்திய அரசு கூறுவதை ஏற்க கூடாது என்றும், தூக்குத் தண்டனை பெற்றவர்களின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும், மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக கல்வி, இசை கற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். கருணைமனு 15 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்படுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications