பெங்களூர் பள்ளியில் 3 வயது சிறுமி பலாத்காரம்: பெற்றோர் போராட்டம், பியூன் கைது
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஆர்கிட் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த 3 வயது எல்.கே.ஜி. மாணவி பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் பியூனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூர் ஜலஹல்லியில் உள்ளது ஆர்கிட் இன்டர்நேஷனல் பள்ளி. அந்த பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 3 வயது மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்துள்ளார். மேலும் அவருக்கு காய்ச்சலும் அடித்துள்ளது. இதையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியிடம் கேட்டதற்கு ஒரு அங்கிள் தான் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றி விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு துணை கமிஷனர் சாரா பாத்திமா உத்தரவிட்டுள்ளார். போலீசார் பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சிறுமி பள்ளி பியூன் தான் தன்னை ஏதோ செய்ததாக அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் பியூனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தகவல் அறிந்த அதே பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக்கு முன்பு கூடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 4 மாதங்களில் பெங்களூர் பள்ளிகளில் நடந்த 3வது பலாத்காரம் இது.
முன்னதாக விப்ஜியார் பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, அதையடுத்து வேறு ஒரு பள்ளியில் படித்த 8 வயது சிறுமி ஆகியோர் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications