டெல்லியில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுக்கிறது.. 3000 தமிழக விவசாயிகள் டெல்லி செல்ல தயார்
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுக்கிறது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் தமிழகத்தில் இருந்து 3000 விவசாயிகள் டெல்லி செல்ல உள்ளனர்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் 3000 விவசாயிகள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி விவசாயிகள் போராட்டம் மேலும் வலுவடைகிறது.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெருகும் ஆதரவு
டெல்லியில் உள்ள தமிழர்கள் அனைவரும் போராட்டக் களத்திற்கு சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் உண்ணுவதற்கு உணவு, பழங்கள், தண்ணீர், பிஸ்கெட் போன்றவை வழங்கி வருகின்றனர்.

பிற மாநில விவசாயிகள்
அதே போன்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

டெல்லி பயணம்
இதனையடுத்து, தமிழகத்தில் இருந்து 20 விவசாயிகள் இன்று புறப்பட்டு டெல்லிக்கு செல்கின்றனர். விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு பயணமாகியுள்ளார்.

3000 பேர்
இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக 3000 விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட உள்ளனர். விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதால் போராடும் விவசாயிகளுக்கு வெற்றி நிச்சயம் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.












Click it and Unblock the Notifications