2 சகோதரிகளை சீரழித்து கொன்ற பதாவ்னில் 2 குழந்தைகளின் தாய் பாலியல் பலாத்காரம்
பதாவ்ன்: உத்தர பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் போலீஸ்காரரின் மகன் உள்பட 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டம் பிசௌலி பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு. போலீஸ்காரரின் மகன். அப்பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளோடு மருந்து வாங்க வெள்ளிக்கிழமை இரவு கடைக்கு சென்றார். அப்போது ஹிமான்ஷு அந்த பெண்ணை அவரின் குழந்தைகளுடன் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
வெளியே சென்ற அவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து அந்த வீட்டுக்கு வந்தார். பின்னர் அந்த 3 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பற்றி அந்த பெண் சனிக்கிழமை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் ஹிமான்ஷு, கலிஃபா என்ற பிரமோத் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே பதாவ்ன் மாவட்டத்தில் தான் கடந்த மாதம் 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டதால் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.