மோடியின் வாரணாசியில் 'சந்தன கடத்தல்' வீரப்பன் மருமகன் உட்பட 34 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி!!
வாரணாசி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேப்டாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் மருமகன் ராமச்சந்திரன் உட்பட 34 பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தின் வதோதரா, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக 78 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியாமல் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தக் கூடிய நிலைமை உருவாகலாம் என்று கூறப்பட்டு வந்தது. 64 பேர் வரை போட்டியிட்டால்தான் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வேட்புமனுக்கள் நேற்று பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் மருமகன் ராமச்சந்திரன் உட்பட 34 பேர் தாக்கல் செய்த மனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது அங்கு 44 பேர் களத்தில் உள்ளனர்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை மறுநாள் கடைசி நாள். அன்று மேலும் சிலர் வேட்புமனுக்களை வாபஸ் பெறக் கூடும் எனத் தெரிகிறது.