இமாசலப் பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்- மக்கள் பீதி
சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தலைநகர் சிம்லாவில் இருந்து 52 கி.மீ தொலைவில் சனிக்கிழமை அதிகாலை பலத்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் 'குல்லு' பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.44 மணிக்கு முதல் தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.
அடுத்து சிறிது நேரத்தில் காலை 7.05 மணிக்கு 3வதாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது இருமுறையும் லேசான நிலநடுக்கம் என்பதால் சேதம் எதுவும் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
குல்லு பகுதியை மையமாக கொண்டு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
FLASH: Earthquake tremors with magnitude 4.6 felt in parts of Himachal Pradesh at 6:45 am this morning.
— ANI (@ANI_news) August 27, 2016
உலகிலேயே இமாசலப் பிரதேசமும், உத்தரகாண்ட் மாநிலமும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய அபாய பகுதியில் இருப்பதாக நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாகவே ஆசிய கண்டத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜப்பானில் கடந்த வாரங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மத்திய மியான்மரில் கடந்த இரு தினங்களுக்கு 6.8 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான பீகார், அசாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. பாட்னாவில் மூன்று வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நாட்களுக்கு முன் அரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 3.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டடங்கள் மண்ணில் புதையுண்டன.300 பேர் வரை பலியாகியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.