சத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர் மாவட்டம், திகரப்பரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் திடீரென நேற்றைய தினம் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீவிபத்து உண்டானது. இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் அவசர சிகிச்சை பிரிவில் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த 4 நோயாளிகள் பலியாகிவிட்டனர். கடும்புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதே மருத்துவமனையில் பிற வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 25 கொரோனா நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மருத்துவமனையில் தீயணைப்பு கருவிகளை உரிய நேரத்தில் ஏன் பயன்படுத்தவில்லை என்பதை விசாரணை நடத்தி மருத்துவமனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications