ஆளுநர் இல்லத்தில் டெல்லி முதல்வர் தர்ணா... 4 மாநில முதல்வர்கள் கேஜரிவாலுக்கு ஆதரவு
ஆளுநர் இல்லத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெல்லி: டெல்லி ஆளுநர் மாளிகையில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் மாநில அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் தனது அமைச்சர்களுடன் 6-ஆவது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

சந்திக்க முடியவில்லை
இதனிடையே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள, முதல்வர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி ஆகியோர், அரவிந்த் கேஜரிவால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரை சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சந்திக்கவில்லை
இதையடுத்து 4 பேரும் துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் அளித்தனர். அதற்கும் அனுமதி கிடைக்காததால் அவர்கள் துணை நிலை ஆளுநரை சந்திக்கவில்லை.

சாசன நெருக்கடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசு கூட்டாட்சி முறையை சிதைத்து வருகிறது என்றார். மம்தா பானர்ஜி பேசுகையில், டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் சாசன நெருக்கடிக்கு பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.

வலியுறுத்தல்
டெல்லி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications