குருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: வங்கிக் கணக்கு இல்லாததால் பானையில் சேமித்து வைத்திருந்த ரூ 5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் முற்றிலும் நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலயா. இவர் பன்றி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமிக்கும் பழக்கம் குறித்து தெரியவில்லை.
இதனால் அவருக்கு எந்த வங்கியிலும் கணக்கும் இல்லை. இந்த நிலையில் பன்றி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து ஒரு பையில் போட்டு வைத்துள்ளார்.
பிஜிலி கனவு
இந்த சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பிஜிலியின் கனவாகும். இதற்காக எப்படியாவது ரூ 5 லட்சம் வரை சேமிக்க அவர் முயற்சித்தார். அதன்படி சிறுக சிறுக கிடைக்கும் வேலையை செய்து கடுமையாக உழைத்து பணத்தை சேமித்து வைத்தார்.
வீடு வாங்கும் சந்தோஷம்
அவருக்கு ரூ 5 லட்சம் வரை சேர்ந்துவிட்டது. இதையடுத்து வீடு வாங்கும் சந்தோஷத்தில் அந்த பணத்தை எடுத்து எண்ண முயற்சித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணத்தை கரையான்கள் அரித்து நாசம் செய்திருந்தன.
வீணாகி போன பணம்
ரூ 500, ரூ 200 என அத்தனை பணமும் அரிக்கப்பட்டு வீணாகி போனது. இதனால் பிஜிலி மிகவும் மனவேதனையடைந்தார். இதையடுத்து கரையான்கள் அரித்த பணத்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பிஜிலி கொடுத்துவிட்டார்.
கோரிக்கை
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விசாரணையில் பணத்தை பிஜிலி கொடுத்தது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்த போலீஸார் இதுகுறித்து பிஜிலியிடம் விசாரணை நடத்திய போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து படிப்பறிவு இல்லாததால் சேமிக்க தெரியாமல் வீணான பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.