காவிரியில் நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் தீ பந்தங்களுடன் நள்ளிரவில் போராட்டம்.. தற்கொலை முயற்சி!
மாண்டியா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தீ பந்தங்களுடன் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கர்நாடக விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தி மாண்டியாவில் நேற்று கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக ராம்நகர், மாண்டியா, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மாண்டியாவில் மட்டும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நீர் திறப்பையடுத்து கர்நாடகா விவசாயிகள் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தி வருவதால் இரு அணைகளிலும் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு அணைப்பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே காவிரி ஆற்றில் குதித்து சூரி என்ற விவசாயி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக சதிஷ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முதல்வர் சித்தராமையாவும் டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications