ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய அடாவடித் தாக்குதல்: சிறுவன், பெண் உள்பட 6 பேர் பலி
காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியர ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 9 வயது சிறுவன், ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பிரதமர் மோடிக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட விரும்புவதாக அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் வாழ்த்திய நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நான்கு செக்டர்களில் இருக்கும் ராணுவ நிலைகள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். விடிய விடிய தொடர்ந்த இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் 9 வயது சிறுவன், கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பொதுமக்கள் நேற்று பலியாகினர். இந்நிலையில் பாலகோட் செக்டரில் 40 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் ஜம்முவுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் அத்துமீறி 32 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பூஞ்ச் பகுதியில் நேற்றுடன் தொடர்ந்து 8வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகோட் கிராமத்தில் 7 பேர் சென்ற வாகனத்தை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் இருந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பலியானார்.
ஜூலை மாதம் 26ம் தேதியில் இருந்து இதுவரை பாகிஸ்தான் 192 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்று அரசு கடந்த வாரம் லோக்சபாவில் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications