கொல்கத்தாவில் 2 விடுதலைப் புலிகள் உட்பட 6 ஈழத் தமிழர்கள் கைது- போலீசார் துருவி துருவி விசாரணை!
கொல்கத்தா: கொல்கத்தாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 6 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்கத்தாவுக்கு ஏன் வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் 6 ஈழத் தமிழர்களை இன்று அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் ஈழத் தமிழர்கள்.
இவர்களில் குணசேகரன் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு சில நாட்களுக்கு முன்பே வந்துள்ளனர்.
இந்த 6 பேரும் கொல்கத்தாவுக்கு வந்தது ஏன்? இவர்களுக்குத் மாவோயிஸ்டு அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? ஆயுதக் கடத்தலில் தொடர்பிருக்கிறதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் தமிழகத்தில் அடுத்தடுத்து சில விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது நடவடிக்கையில் சிக்காமல் தப்பியவர்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.