69 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்... தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி உள்ளிட்ட 8 மாணவ மாணவியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது...

தமிழக மருத்துவ கல்லுாரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில்லை.
கல்வியில் ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு இருந்தால் எங்களுக்கு இடம் கிடைத்திருக்கும். இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
எனவே தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பிறப்பிக்கப்பட்டது போல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications