எல்லா பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம்: மும்பை கூட்டத்தில் மோடி தாக்கு
மும்பை: நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று மும்பை பொதுக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்த மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டம் மும்பையில் உள்ள பந்த்ரா-கர்லா காம்பிளக்ஸ் அருகே உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் இன்று மதியம் துவங்கியது.
மோடிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்தவர்கள் குறைந்தது இரு முறை சோதனை செய்யப்பட்ட பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மும்பையில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மோடி பேசுகையில்,
ஆங்கிலேயர் ஆட்சியில் எப்படி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினோமோ அதே போல் தற்போது காங்கிரஸே வெளியேறு இயக்கத்தை துவங்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் பிரித்து ஆளும் கொள்கையை பயன்படுத்தி வருகிறது. இந்த கொள்கையை அது ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் இல்லா இந்தியா நிச்சயம் சாத்தியமாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஒரே மாநிலமாக இருந்தது. நம் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாட்டை காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
குஜராத்தும், மகாராஷ்டிராவும் ஒரே ஆண்டில் தான் தனி மாநிலங்களாகின. அதில் இருந்து இன்று வரை குஜராத் 14 முதல்வர்களையும், மகாராஷ்டிரா 26 முதல்வர்களையும் பார்த்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள்? இங்கு மட்டும் பாஜக ஆட்சி நடந்திருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர் ஒருவர் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு நேற்று ஊழல் பற்றி பேசினார். காங்கிரஸுக்கு முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் ஊழலை பற்றி பேசுவது அதிசயமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications