ஜமாதுல் முஜாகுதின் அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் வங்காள தேசத்தில் கைது
டாக்கா: வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாகுதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்காள தேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான மிர்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிரவாதிகள் இருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சில மணிநேரம் நீடித்தது. அதைத் தொடர்ந்து போலீசாரும் பதில் தாக்குதலை தொடர்ந்தனர். இறுதியில் தீவிரவாதிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக தீவிரவாதிகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டாக்கா காவல்துறை இணை ஆணையர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜமாதுல் முஜாகுதின் வங்காளதேச தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 3 பேர் அந்த இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள். தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.