7-வது ஊதியக்குழு அறிக்கை மத்திய நிதியமைச்சரிடம் சமர்பிப்பு: 23.5 சதவீத ஊதிய உயர்வுக்கு பரிந்துரை!
டெல்லி: 7-வது ஊதியக்குழு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார். இதில் ஒட்டு மொத்த மத்திய அரசு ஊழியர்களுக்கும் 23.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதிய கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதன்படி 6-வது ஊதிய குழுவின் சிபாரிசு, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 7-வது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வர்த்தக பிரிவினர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அறிக்கை தயாரித்தனர். இந்நிலையில் 900 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார்.
அந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000 நிர்ணயம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் 52 படிகளையும் ரத்து செய்ய குழு பரிந்துரைந்துள்ளது. ஒய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சனை 24 சதவீதம் உயர்த்தி வழங்கவும் அடிப்படை சம்பளம் 16 சதவீதமும் இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தி வழங்கவும் ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் பரிசீலனைக்குப் பின்னர் 7 வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications