பஞ்சாப் செல்ல இருந்த 70 குழந்தைத் தொழிலாளர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் மீட்பு
டெல்லி: பீகார் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக பஞ்சாப் கொண்டு செல்லப்பட இருந்த 70 குழந்தைகள் டெல்லி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பளம் குறைத்துக் கொடுக்கலாம் என்ற காரணத்திற்காக கல்வி பயில வேண்டிய பல குழந்தைகள் சிறு வயதிலேயே தொழிலாளர்களாக மாற்றப் படுகின்றனர். இதைத் தடுக்க அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பீகாரிலிருந்து பஞ்சாப்புக்கு குழந்தைத் தொழிலாளர்கள் ரயில் மார்க்கமாக அழைத்துச் செல்லப் படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து செயல்பட்ட போலீசார், மனித உரிமைகள் அமைப்பினர் உதவியுடன் டெல்லி பழைய ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர்.
அப்போது சுமார் 8 முதல் 16 வயது கொண்ட 70 குழந்தைகள் வேலைக்காக பஞ்சாப் செல்வது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு, காப்பகங்களில் சேர்க்கப் பட்டுள்ளனர்.