இந்தியாவுக்குள் தப்பி ஓடிவந்த 75 மியான்மர் ராணுவ வீரர்கள்..மேலும் பலர் மிசோரம் மாநிலத்தில் தலைமறைவு?
ஐஸ்வால்: மியான்மர் நாட்டில் ஆயுதக் குழுவினருடனான மோதலைத் தொடர்ந்து அந்நாட்டு ரானுவ வீரர்கள் 75 பேர் இந்தியாவுக்குள் தப்பி ஓடிவந்தனர். மேலும் பலர் மிசோரம் மாநிலத்தின் வனப் பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய எல்லையோர பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆயுத குழுக்கள் கை ஓங்கி இருக்கிறது. இதனால் மியான்மர் ராணுவம்- ஆயுத குழுக்களிடையே தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது.

அண்மையில் இந்திய எல்லையில் மியான்மர் ராணுவ முகாம்கள் மீது ஆயுத குழுவினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ முகாம்களையும் அந்த குழுவினர் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு அஞ்சிய மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் மிசோரம் மாநில பகுதியில் நுழைந்து தப்பினர். பின்னர் முறைப்படி மிசோரம் மாநில போலீசாரிடம் மியான்மர் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுவரை 75 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து உயிர் தப்பி இருக்கின்றனர்.
இந்தியாவுக்குள் நுழைந்த 75 மியான்மர் வீரர்களும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் மூலமாக பாதுகாப்பாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மியான்மர்- இந்தியா எல்லை பகுதியான மணிப்பூரின் மோரே எல்லையில் இந்த 75 ராணுவ வீரர்களும் அடுத்தடுத்து மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்தியாவுக்குள் தப்பி ஓடி வந்த மியான்மர் ராணுவத்தினரில் பலரும் மணிப்பூர், மிசோரம் எல்லைகளில் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இவர்களையும் தேடி கண்டுபிடித்து மியான்மருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மியான்மரில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் மிசோரமில் நுழைந்துள்ளனர். இந்த அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால் மியான்மரில் இருந்து வந்த அகதிகள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்; அகதிகளாக பாதுகாப்பு தருவோம் என்கிறது மிசோரம்.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதிதான் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. அன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications