சூனியக்காரி என்று கூறி 85 வயது பாட்டியை அடித்து நிர்வாணப்படுத்திய கிராம மக்கள்
ஜெய்ப்பூர்: சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 85 வயது பெண் அடித்து நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயது சௌபாய், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்த கிராமத்தார், சௌபாயை தலைமுடியை பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் அவர் மீது ஏதோ திரவத்தை ஊற்றிய கிராமத்தார், அவரை நிர்வாணப்படுத்தி சூடான இரும்புக் கம்பியால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரை வாய்க்கால் ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர்.
சௌபாயை சூனியக்காரி எனக் கருதி கிராமத்தார் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார் சௌபாய். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் பெண்களை இவ்வாறு சூனியக்காரிகள் எனக் கருதி சித்ரவதை செய்வதற்கு எதிராக சட்டமே உள்ளது. பெண்களை இவ்வாறு கொடுமைப்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுகிறது.
ஆனபோதும், அடிக்கடி இவ்வாறு சூனியக்காரிகள் என முத்திரைக் குத்தப்பட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டுவது அங்கு தொடர்கதையாக உள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வாறு பல்வேறு புகார்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பில்வாரா மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் இவ்வாறு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.