ஆந்திராவில் 163 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள்... ஜெகன்மோகன் ரெட்டிக்கு 2 வது இடம்
அமராவதி: ஆந்திர சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. வருகிற 30 ம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்தநிலையில், மொத்தம் தேர்வான 174 எம்எல்ஏக்களில் 163 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
சராசரியாக ஒரு எம்எல்ஏவுக்கு 27 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அதில் 668 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 510 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியும் 2 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதே போல், பெரும் பணக்கார எம்.பி.க்களில் முதல் 3 இடங்களிலும் காங்கிரசார் உள்ளனர். அவர்கள் மத்தியபிரதேசம் நகுல்நாத் (ரூ.660 கோடி), தமிழ்நாடு எச்.வசந்தகுமார் (ரூ.417 கோடி), கர்நாடகா சுரேஷ் (ரூ.338 கோடி) சொத்துக்கள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications