இப்போ அளந்து பாருங்க, 500 மீட்டர் தூரத்துலதான் வருது.. கேரள மதுக்கடை ஓனரின் தாறுமாறு பிளான்
கொச்சி: நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக் கடைகள் இருக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்கள் மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு மது விற்பனை தொடருகிறது. மாநில அரசுகளே இவ்வாறு செய்கின்றன.
இப்படி ஒரு மோசடியை கேரளாவை சேர்ந்த மதுபானக் கடை உரிமையாளர் அரங்கேற்றியுள்ளார். ஆனால் இது யாரும் யோசிக்க முடியாத ஒரு மோசடியாகும்.
கேரள மதுபானக்கடை
இந்த மதுபானக் கடை எர்ணாக்குளம் அருகேயுள்ள பரவூரிலுள்ளது. இதன் பெயர் ஐஸ்வர்யா ரெஸ்டோபார் என கூறுகிறது நியூஸ் மினிட் இணையதளம். மதுபானக் கடையின் மிக அருகேயே நெடுஞ்சாலை உள்ளது. எனவே சாலைக்கும், கடைக்குள் நடுவேயுள்ள தங்கள் இடத்தில், ஜிக்ஜாக் (maze) பாணியில் மதில் சுவர் எழுப்பியுள்ளார் மதுபானக் கடை உரிமையாளர்.
விஞ்ஞானத்தோடே விளையாட்டு
இப்போது சாலையிலிருந்து நடந்து வந்தால், இந்த சுவரை சுற்றி சுற்றி கடைக்கு வருவதற்குள் 500 மீட்டர் தூரத்தை தாண்டிவிடலாம். இதை பார்த்த அதிகாரிகளே என்ன செய்வது என தெரியாமல் விழித்துக்கொண்டுள்ளனர்.
செலவு கம்மி
இந்த சுவற்றை எழுப்ப ரூ.2 லட்சம் செலவுபிடித்துள்ளது. கடையை மாற்றினால் வேறு நல்ல இடம் கிடைக்காது, அதற்காகும் செலவு உள்ளிட்டவற்றோடு ஒப்பிட்டால் இது லாபம் என்கிறார் கடை உரிமையாளர்.
நிதானம், பிரதானம்
இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. குடிமகன்கள், குடித்துவிட்டு வெளியே வரும்போது இப்படி சுற்றி சுற்றி வரும் அளவுக்கு திறமை இருக்குமானால் அவர் கொஞ்சமாக குடித்துள்ளார் என பொருள். இதை தாண்டி வெளியே வர முடியாவிட்டால், அங்கேயே மட்டையாகிவிட வேண்டியதுதான்.
அடடே ஐடியா
இப்படிப்பட்ட ஒரு சக்கர வியூகமாகவும் இந்த சுவரை பார்க்கலாம். ஓவராக குடிப்பது குறைந்து, வாகனத்தை இயக்கும் அளவுக்கு தெம்போடு இருப்பவர்களால்தான் இந்த ஜிக்ஜாக் வியூகத்தை தாண்டி வெளியேற முடியும். ஒருவேளை இப்படி சுற்றி சுற்றி வந்தால் அடித்த போதையும் அவர்களுக்கு இறங்கிவிட வாய்ப்புள்ளது. சேட்டன் சூப்பர்ல. ( Images: The Newsminute)