உ.பி: கடன் வசூலிக்க வந்த வங்கி ஏஜென்டுகள் கொடூரம்... டிராக்டர் முன் தள்ளப்பட்டதில் விவசாயி பலி
உத்திர பிரதேச மாநிலத்தில் கடனை செலுத்தாத விவசாயியிடம் டிராக்டரை பிடுங்கிச் சென்ற ஏஜென்டுகள் விவசாயியை கீழே தள்ளியதில் டிராக்டரில் சிக்கியே விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதாபூர் : உ.பியில் ரூ. 5 லட்சம் கடனை திருப்பி செலுத்தாத விவசாயியிடம் டிராக்டரை பறிமுதல் செய்த தனியார் வங்கி ஏஜென்ட்டுகள் விவசாயியை கீழே தள்ளியதில் உழவு செய்த நிலத்திலேயே உறவினர்கள் கண் முன்னே அவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிதாபூர் கிராமத்தில் விவசாயம் பார்த்து வருகிறார் 45 வயது கியான் சந்த்ரா. இவர் தன்னுடைய வயல் பணிக்காக தனியார் வங்கியிடம் ரூ. 5 லட்சம் கடன் பெற்று டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையில் மீதம் ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தொகையிலும் ரூ. 35 ஆயிரம் செலுத்தியுள்ளார் கியான் சந்த்ரா, ஆனால் டிராக்டரை பறிமுதல் செய்ய 5 வங்கிஏஜென்ட்டுகள் வந்து கியானிடம் தகராறு செய்துள்ளனர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வயலில் உழுது கொண்டிருந்த போதே டிராக்டரின் சாவியை விவசாயியிடம் இருந்து பறித்துள்ளனர் வங்கி ஏஜென்ட்டுகள்.
மேலும் டிராக்டரை ஓட்டிச் செல்லும் போது விவசாயியை பிடித்து தள்ளியுள்ளனர். இதில் டிராக்டரின் முன் பக்க டயர் மீது பாய்ந்த விவசாயி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். "தன்னுடைய சகோதரர் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஏஜென்ட்டுகள் இறக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக கியான் சந்த்ராவின் சகோதரர் ஓம் பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் கண் முன்னே என்னுடைய அண்ணன் தன்னுடைய வயலிலேயே உயிரை விட்டார் என்றும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உயிரிழந்த சந்திராவிற்கு இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளன. 5 பெண் குழந்தைகள் உள்பட 7 பேர் உள்ள குடும்பத்திற்கு அவர் ஒருவர் மட்டுமே ஆதாரமாக இருந்துள்ளார். தன்னுடைய நிலத்தில் பயிரிடுவது மட்டுமின்றி மற்ற நிலங்களிலும் உழவுப் பணி பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அண்மையில் அறிவித்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 87 லட்சம் விவசாயிகள் மாநிலத்தில் பயன் அடைவார்கள் என்றும் அவர் கூறி இருந்தார். ஆனால் இந்த கடன் தள்ளுபடி வரன்முறையானத ரூ. 1 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. எனினும் தனியார் வங்கிகளின் இது போன்ற மோசமான செயல்களை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.