ஜெ வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் பரமானந்தா கட்டாரியா தனி மனு தாக்கல்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா தனியே ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடாகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்ற வருகிறது.

இவ்வழக்கின் கடந்த முறை விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா நீதிபதிகளிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை தனியே ஒரு மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் பரமானந்தா கட்டாரியா இது தொடர்பாக தனி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆகையால் அவர் தமக்கு எதிரான தீர்ப்பை திருத்தம் செய்ய கோரி சிறப்பு நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டால்தான் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஆகையால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது முறையானது அல்ல; அப்படியான நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் விசாரணைக்கு அம்மனுவை மாற்றி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications