பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. திடீரென குவிக்கப்பட்ட சிஐஎஸ்எஃப்..ஆர்ஜி கர் மருத்துவமனை பரபர
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் அந்த மருத்துமனையில் சிஐஎஸ்எஃப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் மரணத்திற்கான சாத்தியக் கூறுகள், ஆதாரங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா எனவும், ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான மாணவி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கன்னம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிபிஐ தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டு இருந்தது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றால், நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட அந்த நபரின் ஒப்புதல் தேவை. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை அடுத்த அனுமதிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆச்சரியப்படுத்தி சிபிஐ கோரிக்கை விடுத்தது.
இதை அடுத்து சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்களிடம் கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்தது. மேலும் ஏற்கனவே கைதாகி இருக்கும் சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உத்தரவை தொடர்ந்து ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மட்டும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். தற்போது அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications