சுங்கக்கட்டணம் கேட்டு லாரி பம்பரில் ஏறிய ஊழியர்: அப்படியே 10 கி.மீ. இயக்கிய ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ
(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)
சுங்கக்கட்டணம் கேட்டு நிற்காத லாரி முன்பு தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி அலுவலரை, அப்படியே 10 கி.மீ லாரியை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள சுங்கச்சாவடிக்கு உருளைக்கிழங்கு ஏற்றிய ஒரு லாரி வந்தது. அந்த லாரி ஓட்டுநர் 'பாஸ்ட்டேக்' மூலம் கட்டணம் செலுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து அபராதமாக ஒரு தொகை செலுத்துமாறு லாரி ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து லாரியை ஓட்டிச்செல்ல ஓட்டுநர் முயன்றிருக்கிறார். அதைத் தடுக்கும் விதமாக சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் லாரியின் குறுக்கே வந்திருக்கிறார்.
ஆனால், ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் மோதுவது போல வரவே, மேற்பார்வையாளர் லாரியின் முன்புற பம்பரில் ஏறி தொற்றிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகும் லாரியை ஓட்டுநர் நிறுத்தவில்லை.
- போராட்டங்களால் பலவீனமாகிறதா இலங்கை சுற்றுலாத் துறை? கள நிலவரம் என்ன?
- 'சோற்றுக்கு வழியில்லை; பட்டினி கிடக்கிறோம்' : இலங்கை போராட்டத்தில் கண்ணீர்க் குரல்கள்
இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை துரத்தினர். நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ. துரத்தலுக்கு பின் லாரியை போலீசார் மடக்கினர். ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் லாரி முன்புற கம்பியை பற்றிக்கொண்டு மேற்பார்வையாளர் பயணம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட லாரி ஒட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காமராஜர் ஆட்சியை அளிக்கிறார் மு.க.ஸ்டாலின்: காங்கிரஸ் எம்எல்ஏ
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி வருவதாக, காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கூறியுள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதன விவாதத்தில் அவர் பேசுகையில், "மக்கள் மனதில் எம்ஜிஆருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தான் இருக்கிறார். காமராஜரைப் போல நேர்மையான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கிவருகிறார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருபவர் அவர். பெண் குழந்தைகள் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும்.
பாலியல் குற்ற வழங்குகள் 17,000-இலிருந்து 12,000-ஆகக் குறைந்திருக்கிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க போக்சோ சட்டம் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
"நான் விலகினால் யார் பிரதமர்?"
"தற்போதைய பிரச்னைகளுக்கு இடைக்கால அரசாங்கம் தான் தீர்வு என கருதினால் பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயாராகவே உள்ளேன், ஆனால் நான் உட்பட அரசாங்கம் பதவி விலகினால் அடுத்ததாக யார் பிரதமராக நியமிக்கப்படுவார்? பிரதமருக்கு யாரேனும் ஒருவர் தயாராக உள்ளார் என்றால், அவர் யார் என்பதையும் அவரது வேலைத்திட்டம் என்ன என்பதையும் இப்போதே முன்வைக்க வேண்டும்" என, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஹாநாயக தேரர்களிடத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், "இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் மஹாநாயக தேரர்களின் எதிர்பார்ப்பு என்றால் தேரர்களின் தலைமையில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து புதிய வேலைத்திட்டத்தை உடனடியாக அமைக்க வேண்டும்" எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
"வெறுமனே ஜனாதிபதியை மாத்திரம் வைத்துக்கொண்டு நாட்டை கொண்டு நடத்த முடியாது.
பிரதமர் மற்றும் அமைச்சரவை இயங்கினால் மட்டுமே நாட்டினை மீட்டெடுக்க முடியும். எனவே, இது குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ஷக்களுடன் எமக்கு எவ்வித ரகசிய தொடர்பும் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி
ராஜபக்ஷக்களுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித ரகசிய தொடர்பும் இல்லை, வாசுதேவ நாணயக்காரவே அவர்களுடன் ரகசிய தொடர்பைப் பேணுகின்றார் என, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும்போதே நாம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டோம். அதனை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கும் ராஜபக்ஷக்களுக்கும் எவ்வித ரகசிய தொடர்பும் கிடையாது. வாசுதேவ நாணயக்காரவே அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். அதன் காரணமாகவே ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையில் அவர் கையெழுத்திடவில்லை" என்றார்.
https://www.youtube.com/watch?v=43K_c9FvxUM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்