ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட யானை.. பயணிகள் கண் முன்னே துடி துடித்து பலியான சோகம்.. அசாமில் ஷாக்
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ரயில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.
சமீப காலமாக காடுகளின் பரப்பளவுகள் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. மீதமிருக்கும் காடுகளை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் மறுபுறம் காடுகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

நேற்று இப்படியான ஒரு சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை பதற வைத்திருக்கிறது. அதாவது, அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தின் வழியாக கஞ்சன்ஜங்கா எனும் விரைவு ரயில் வேகமாக சென்றிருக்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காட்டு யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கிறது. ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரயில், யானை மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் யானை அலறியவாறு சுருண்டு விழுந்துள்ளது.
பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து நிற்க முயன்றிருக்கிறது. தட்டு தடுமாறி எழுந்து பக்கத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறது. ஆனால் முடியவில்லை. அங்கேயே வலியால் துடித்து உயிரிழந்திருக்கிறது. யானை உயிரிழந்தது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இருப்பினும் இதனை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என வனவிலங்கு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கின்றனர். யானைகள் மட்டுமல்லாது வேறு சில உயிர்களும் ரயில் மோதி அடிக்கடி உயிரிழக்கின்றன.
கடந்த 2022ம் ஆண்டு சிஏஜி வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 16,000 உயிரினங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரயில் மோதி உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவு உயிரினங்கள் பலியாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் வடக்கு மத்திய ரயில்வே (NCR), வடக்கு ரயில்வே (NR), வடகிழக்கு ரயில்வே (NER) மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே (ECR) உட்பட நான்கு ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதில் 2017 முதல் 2021ம் ஆண்டுவரை சுமார் 23,201 உயிரினங்கள் ரயில்கள் மோதி பலியாகியுள்ளன. அதேபோல 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2022 ஏப்ரல் மாதம் வரை சுமார் 18,655 உயிரினங்கள் பலியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதல் தெற்கில் லலித்பூர் மற்றும் கிழக்கில் முகல் சராய் (தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு) வரை NCR மண்டலமாகும்.
இந்த பகுதியில் 23,201 உயிரினங்கள் பலியாகியுள்ளன. எனவே இந்த பகுதிகளில் ரயில் இயக்கம் சுமார் 11,137 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளது.
அதேபோல ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளையும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில பகுதிகளை கொண்டிருக்கும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 2,219 உயிரினங்கள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளன. மேலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வட மேற்கு ரயில்வே மண்டலத்தில் 6,740 உயிரினங்கள் ரயில் மோதி பலியாகியுள்ளளன.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 2017 முதல் 2021 வரை 63,345 உயிரினங்கள் பலியாகியுள்ளன. இதில் 73 யானைகளும் அடங்கும் என்று சிஏஜி தெரிவித்திருந்தது. இந்த அறிக்கை 2022ல் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், காட்டு விலங்குகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதுமான நடவடிக்கை எடுக்காததால்தான் நேற்று அசாமில் காட்டு யானை உயிரிழந்திருக்கிறது என வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications