இந்தியாவில் 30 நிமிடத்திற்கு ஒரு பலாத்காரம்! ஆய்வில் அதிர்ச்சி!!
டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க எத்தனையோ கடுமையான சட்டங்கள் போடப்பட்டாலும் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 57க்கும் அதிகமான பெண்கள் நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
பலாத்கார சம்பவங்கள் நாட்டில் நடைபெற்று வந்தாலும் நிர்பயா சம்பவம்தான் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னரே பெண்களிடையே விழிப்புணர்வும் ஏற்பட்டது.

பலாத்கார வழக்குகள்
கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் 2013 ஆண்டுவரை நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 2,72,844 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில்
அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 40,422 வழக்குகள் பதிவாகி உள்ளது. அங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. டெல்லியில் 8060 பேர் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.

13 ஆண்டுகளில்
2001ல் 16,075 வழக்குகள் மட்டும் பதிவான நிலையில், 2013ன்போது இந்த எண்ணிக்கை 33,707 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 7875, கர்நாடகாவில் 6204, குஜராத்தில் 4,981 பாலியல் பலாத்கார வழக்குகள் இந்த 13 ஆண்டுகளில் பதிவாகி உள்ளன.

மகாராஷ்டிராவில்
மேற்கு வங்க மாநிலத்தில் 22,472 பெண்களும், உத்தரபிரதேச மாநிலத்தில் 22,108 பலாத்கார வழக்குகளும், மகராஷ்டிராவில் 21,049 பலாத்கார வழக்குகளும் ராஜஸ்தானில் 19,083 பலாத்கார வழக்குகளும் பதிவாகியுள்ளன.

எத்தனை விசாரணைகள்
2012 வரைக்கும் 1,01,041 பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. 2013ல் இந்த எண்ணிக்கை 1,14,785 ஆக உயர்ந்துள்ளது.

நிராபராதிகள்
2012ல் மட்டும் 14,717 வழக்குகளில் 3,563 பேர் குற்றவாளிகள் என்றும், 11,154 பேர் நிரபராதிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2013ல் 18,833 வழக்குகளில் 5,101 பேர் குற்றவாளிகள் என்றும், 13,735 பேர் நிரபராதிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

30 நிமிடத்திற்கு ஒரு பெண்
18 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்களே அதிக அளவு ( 15 ஆயிரத்து 556 பேர்) பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். பெண்கள் பெரும்பாலும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களால் தான் பாலியல் பலாத்கார தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.












Click it and Unblock the Notifications