மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடியாது, ஓரினசேர்க்கையை தடுக்க முடியாது- ஆதார் தீர்ப்பின் எதிரொலிகள்
டெல்லி: தனி நபர் அந்தரங்கம் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின்கீழ் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 9 நீதிபதிகளும் இன்று ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்த தீர்ப்பு ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கில் வெளியானது என்றபோதிலும், மேலும் பல்வேறு வழக்குகளில் இந்த தீர்ப்பு முன் உதாரணமாக அமையப்போகிறது.
இந்த தீர்ப்பை உதாரணம் காண்பித்து மேலும் பல வழக்குகளில் வாதிட முடியும். எனவே மத்திய அரசு தனது விருப்பப்படி எந்த சட்டத்தையும் மக்கள் மீது திணிக்க முடியாது.
மாட்டிறைச்சி
உதாரணத்திற்கு, மாட்டிறைச்சி சாப்பிடுவது ஒருவரின் அடிப்படை உரிமை என்ற வகையில், அதை தடுக்க சட்டம் இயற்றினால் இந்ததீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு அந்த சட்டத்தை செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க முடியும்.
ஓரின சேர்க்கை
மேலும், ஓரின சேர்க்கையை தடை செய்ய அரசு விரும்பினால், தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் அதை எதிர்த்து வழக்காடி வெல்ல ஓரின சேர்க்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாட்ஸ்அப்
இதேபோல வாட்ஸ்அப்பிலுள்ள தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் ஷேர் செய்ய கஷ்டமாகும். இரண்டும் ஒரே நிறுவனம் என்றபோதிலும், வாடிக்கையாளர்கள் அந்தரங்கத்தை ஷேர் செய்ய வாட்ஸ்அப்புக்கு உரிமை இருக்கப்போவதில்லை.
ஷேர் செய்ய முடியாது
இதேபோல ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்படும் விவரங்களை சேகரித்து வைத்து அதை அரசின் பல திட்டங்களுக்கும் ஷேர் செய்வதும் தடை செய்யப்படும். இவையெல்லாம் ஆதார் தீர்ப்பின் காரணமாக உருவாகப்போகும் எதிரொலிகள்.