லோக்சபா தேர்தலிலும் களம் காண ஆம் ஆத்மி கட்சி தீர்மானம்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் புயலைக் கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி வரும் லோக்சபா தேர்தலிலும் களம் இறங்க தீர்மானித்துள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். இன்று நாட்டின் திருப்பங்களை ஏற்படுதக் கூடிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெளிப்படுத்திய விஸ்வரூபத்தால் பாஜகவும் காங்கிரஸும் கதி கலங்கிப் போய்கிடக்கின்றன. இந்த விஸ்வரூபத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசியலில் தமது கவனத்தை ஆம் ஆத்மி கட்சி செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்குவது குறித்து விவாதித்திருக்கின்றனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் போட்டியிடாவிட்டாலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் கட்சி கட்டமைப்புக்கு மீறிய நடவடிக்கையாக இருந்துவிடுமோ என்ற அச்சமும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதனால் நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் குறிப்பாக கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில் கவனம் செலுத்தவும் அக்கட்சி தீர்மானித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications