ஆ.. 2024ல் மோடியுடன் பிரதமர் பதவிக்கு கெஜ்ரிவால் மோதுவாராமே.. ஆம் ஆத்மியின் அதிரடி நம்பிக்கை!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என எக்சிட் போல் கணிப்புகள் கூறியதை அடுத்து அக்கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது. அங்கு 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேதான் போட்டி என்பதை குறிக்கும் பதாகைகளுடன் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதாவது ஆம் ஆத்மியின் பிரதமர் வேட்பாளர் கெஜ்ரிவால்தான் என்கின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மும்முனை போட்டி இருந்தது.
இந்த தேர்தலில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக இருந்தன.

வாக்கு எண்ணிக்கை
ஆம் ஆத்மி கட்சி 40 முதல் 60 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 36 இடங்களில் வெற்றி இருந்தாலே போதுமானது. இந்த நிலையில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

வெற்றிக் கொண்டாட்டம்
எக்சிட் போல் முடிவுகளால் பூரிப்படைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், நேற்று இரவு முதலே கட்சி அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இப்போதே வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளது ஆம் ஆத்மி. அதில் தொண்டர் ஒருவர் கையில் பதாகை ஏந்தி உள்ளார். அதில் வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே மட்டும் தான் போட்டி இருக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லாமல் சொல்கின்றனர்.
|
காணாமல் போகும்
அதாவது காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் 1 முதல் 4 இடங்கள் வரை மட்டுமே பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டிருந்தது. எனவே காங்கிரஸ் கட்சி தற்போது பின்னோக்கி செல்கிறது என்பதை உணர்த்தும் வகையில் பெரும்பாலான இடங்களில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை என்பதை அந்த பதாகை உணர்த்துகிறது.

கூட்டணி
எனினும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளது. இல்லாவிட்டால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சியில் இடம்பெறுகிறது. இந்த முறை காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரிகிறது. அவ்வாறு ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே தலைநகர் டெல்லி அரசியலில் அக்கட்சி உயிர்ப்போடு இருக்கிறது என்பது தெரியும்.












Click it and Unblock the Notifications