மும்பை ஆம் ஆத்மி 'மொய் விருந்தில்' ரூ.93 லட்சம் வசூல்: அடுத்தது பெங்களூரில்
மும்பை: டெல்லி சட்டசபை தேர்தலுக்கு நிதி திரட்ட மும்பையில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய மொய் விருந்தில் ரூ.93 லட்சம் வசூலாகியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பையில் வியாழக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் வைர வியாபாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு தட்டு சாப்பாட்டின் விலை ரூ.20 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விருந்து பற்றி கட்சி தலைவர் ப்ரீத்தி சர்மா மேனன் கூறுகையில்,
நேற்று இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் டோனர் பாஸ் மூலம் ரூ.36 லட்சமும், காசோலை மூலம் ரூ. 36 லட்சமும் கிடைத்துள்ளது. மேலும் எங்கள் தொண்டர்கள் ரூ.21 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். ஆக மொத்தம் விருந்து மூலம் ரூ. 93 லட்சம் கிடைத்துள்ளது. அடுத்த விருந்து நிகழ்ச்சி பெங்களூரில் நடத்தப்படும். நேற்றைய விருந்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விருந்தில் சில வைர வியாபாரிகள், வேலை பார்க்கும் இளைஞர்கள், சில பாலிவுட் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு அடுத்த 2 மாதங்களில் ரூ.5 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. கட்சிக்கு தாராளமாக நிதி அளிக்குமாறு கெஜ்ரிவால் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.