பிரபாகரனை முதன்முதலில் பேட்டி எடுத்த அனிதா பிரதாப் எர்ணாகுளம் தொகுதியில் போட்டி!!
எர்ணாகுளம்: லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போர்களங்களைப் பதிவு செய்த மூத்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போட்டியிடுகிறார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில் பத்திரிகை துறையில் கோலோச்சியவர் அனிதா பிரதாப். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அருண் ஷோரி ஆசிரியராக இருந்த போது பணிக்கு சேர்ந்தார். பின்னர் சிறிது காலம் "சண்டே" பத்திரிகையில் பணியாற்றினார்.

அப்போதுதான் 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் முதலாவது பேட்டி வெளியானது. அந்தப் பேட்டியை எடுத்தவர் அனிதா பிரதாப். இதன் மூலமாக சர்வதேச நாடுகளின் கவனத்தையும் பெற்றார் அனிதா பிரதாப்.
அதன் பின்னர் இந்தியா டுடேவில் சிறிது காலம் பணியாற்றிய அனிதா பிரதாப், டைம் பத்திரிகைக்காக 8 ஆண்டுகாலம் செய்தியாளராக பணியாற்றினார். அதன் பிறகு சி.என்.என். தொலைக்காட்சியில் இணைந்தார். அட்லாண்டா மற்றும் பாங்காங்கில் அவர் பணிபுரிந்தார்.
ஊடகத்துறையில் சிறப்பாக துணிச்சலாக பணியாற்றியதற்காக பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள அனிதா பிரதாப், இந்தியாவுக்கான நார்வே தூதராக இருந்த ஆர்னே ராய் வால்த்தரை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது ஜப்பானுக்கான நார்வே தூதராக பணிபுரிந்து வருகிறார்.
அனிதா பிரதாப்பின் ஈழம், ஆப்கானிஸ்தான் போர்க்களங்கள் பற்றிய புத்தகம் பலரது பாராட்டையும் பெற்றது. அவர் தற்போது நாடு திரும்பி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
அத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். தாம் ஆம் ஆத்மி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள கள நிலவரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் தெரிவிப்பேன் என்கிறார்.
அனிதா பிரதாப் போட்டியிடும் எர்ணாகுளம் தொகுதியில் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸும் அவரை எதிர்த்து அவரது நெருங்கிய நண்பரான மார்க்சிஸ்ட் கட்சியின் கிறிஸ்டி பெர்னாண்டசும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த பெருந்தலைகளுடன் மோதி அனிதா பிரதாப் வெல்வாரா?












Click it and Unblock the Notifications