பாஜகவின் 'குதிரை பேர' சிடி.. டெல்லி துணை நிலை ஆளுநரிடம் கொடுத்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் நஜீப்சிங்கை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து பாஜக குறித்து புகார் தெரிவித்தார்.
டெல்லியில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக விலை பேசியது.
இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை ஆம் ஆத்மி வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப்சிங்கை நேரில் சந்தித்து பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவின் பேரம் பேசும் சிடியை ஒப்படைத்தார்.
மேலும் டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டும்; பாஜக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.