டிராபிக் போலீசுடன் தகராறு... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சரிதா சிங் மீது வழக்குப் பதிவு
டெல்லி: டெல்லி சாலையில் போக்குவரத்து போலீசுடன் மோதலில் ஈடுபட்டதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சரிதா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சரிதா சிங். நேற்று மாலை இவர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியான ரோடாஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த போக்குவரத்து காவலரின் மோட்டார் பைக் மீது அவரது கார் இடித்துள்ளது. உடனடியாக மோட்டார் பைக்கில் அமர்ந்திருந்த போலீஸ்காரர் கீழே குதித்ததால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
அதனைத் தொடர்ந்து, போலீசிற்கும் சரிதாசிங்கின் கார் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரிதா சிங், சம்பந்தப்பட்ட போலீசை தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேரில் பார்த்த ஒருவரால், வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பரவியது.
இந்த சம்பவத்தையடுத்து, போக்குவரத்து அதிகாரியின் வாகனம் மீது மோதியது மற்றும் அவரிடம் தவறாக நடந்து கொண்டது என சரிதாசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சரிதாசிங் கூறுகையில், ‘போக்குவரத்து போலீசாருக்கும் தனது கார் டிரைவருக்கும் இடையே வாய்த் தகராறு மட்டுமே நடந்ததாக' தெரிவித்துள்ளார்.