கலகக் குரல் எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னிக்கு ஆம் ஆத்மி விளக்க நோட்டீஸ்!
டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தவர் வினோத் குமார். ஆனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வினோத் குமார் பின்னி விரும்பினார்.
ஆனால் இதற்கும் ஆம் ஆத்மி மேலிடம் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார் பின்னி தொடர்ச்சியாக டெல்லி ஆம் ஆத்மி அரசை விமர்சித்து வருகிறார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மீதும் கடுமையான விமர்சனங்களை பின்னி முன்வைத்து வருகிறார்.
இதனால் ஆம் ஆத்மி கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பம் உருவானது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், பின்னி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழில்லை. அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட போதும் பின்னி கூடவே இருந்தார். ஆனால் அப்போது ஆட்சேபனை எழுப்பாத அவர் இப்போது பிரச்சனையை கிளப்புவது வேதனை அளிக்கிறது என்றார்.