குடியரசு தினத்தை கொண்டாடுவதில் என்ன அர்த்தம் உள்ளது?.. கேட்கிறது ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்த லட்சணத்தில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் தேவையா. எதற்காக இந்தக் கொண்டாட்டம் என்று கேட்டுள்ளது ஆம் ஆத்மி.
குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகிய முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதியை ஆம் ஆத்மி கட்சியினர் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகையிட்டிருப்பதும், 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளதும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு இடையூறாக அமையும் என்று கருதப்படுகிறது.
இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே மத்திய பாதுகாப்புப் படையினர் வசம் வந்துள்ளது. காரணம், குடியரசு தினக் கொண்டாட்டம் எதிரொலியாக. இப்பகுதியில் ஏவுகணைகளும், டேங்குகளும் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளன. மிக மிக முக்கியப் பாதுகாப்பு கேந்திரம் போல இது இருக்கிறது.

இப்படிப்பட்ட இடத்தில்தான் உள்துறை அமைச்சகமும் உள்ளது. இந்தப் பகுதியைத்தான் தற்போது கெஜ்ரிவால் அன்ட் கோவினர் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்கள் போராட்டம் தொடர்ந்தால் நிச்சயம் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை உள்ளிட்டவை பாதிக்கப்படலாம்.
இந்த நிலையில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் அவசியமா என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் தொடர்ந்து பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தின விழாவைக் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் உள்ளது.
எங்களது போராட்டத்தால குடியரசு தின விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசே பொறுப்பாகும் என்றார் அவர்.
காங்கிரஸ் கடும் கண்டனம்
இதற்கிடையே கெஜ்ரிவால் கட்சியினரின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் டெல்லி தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், தனது அமைச்சர்களைக் காப்பாற்றவே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார் கெஜ்ரிவால். ஆனால் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உள்ளது. இப்படி தர்ணா நடத்தி அவர்களது பொய்களையும், தவறுகளையும் மறைக்க முடியாது.
உண்மையிலேயே பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கெஜ்ரிவால் நினைத்தால் உடனடியாக, விரைவாக அவர் செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக ஒரு வாரம் கழித்து நான் டெல்லி போலீஸ் கமிஷனரைப் பார்ப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கக் கூடாது என்றார் லவ்லி.
அதிரடிப்படை வரவழைப்பு
இதற்கிடையே, கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் இருக்கிற இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். ஜந்தர் மந்தருக்குப் போய் போராட்டம் நடத்துங்கள் என்று காவல்துறை கோரியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இதையடுத்து அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி காவல்துறை, டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிடியிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் கெஜ்ரிவால்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லி காவல்துறை இருப்பதால், ஒரு எப் ஐ ஆர் போட வேண்டும் என்றால் கூட டெல்லி அரசால் முடியாது. மாறாக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் போய்த் தொங்க வேண்டும். இதனால்தான் கெஜ்ரிவால் குழு கடுப்பாகியுள்ளது.
டெல்லி போக்குவரத்து அமைச்சரை அப்புறப்படுத்திய போலீஸ்
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி ரயில் பவனுக்கு வெளியே கொண்டு போய் விட்டுள்ளனர்.
எம்.எல்.ஏவை. அடிச்சுட்டாங்க... கெஜ்ரிவால் ட்வீட்
இதற்கிடையே, தனது கட்சி எம்.எல்.ஏ அகிலேஷ் திரிபாதியை போலீஸார் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளதாக கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். ஏன் இந்தத் தாக்குதல் என்றும் அவர் கேட்டுள்ளார்.
டிராமா போடும் ஆம் ஆத்மி, காங்- பாஜக சாடல்
ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்துக் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி தெருக்களைப் போர்க்களமாக்கி வருகின்றனர். இதை அமைதியா கை கட்டி வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ். இருவரும் சேர்ந்து நாடகமாடுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இது ஒரு போலிச் சண்டை என்று அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications