குனா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் மீது பாலியல் பலாத்காரப் புகார்
போபால்: ஆம் ஆத்மி கட்சியின் குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வாகா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்றுத் தலைவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குவாலியரைச் சேர்ந்த பெண் ஒருவர் காம்போ காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம், குவாலியரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காம்போ காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘ஆம் ஆத்மி கட்சியின் குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வாகா, குவாலியர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹிமான்சு, மாவட்ட செயலாளர் அபிஜித் வாக் மற்றும் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மனுராஜ் ஆகியோர் என்னை மூன்று முறை கற்பழித்து விட்டனர் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் டிசம்பர் 2012- மார்ச் 2103 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள்' என இவ்வாறு அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
.
மேலும், டெல்லியில் கட்சியின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்ததாகவும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தான் சட்டத்தின் உதவியை நாடி இருப்பதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட புகாரை குஷ்வாகா மறுத்துள்ளார். தனது புகழை கெடுக்கும் எண்ணத்தில், தனது வெற்றியைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், தான் குற்றமற்றவன் என்றும் குஷ்வாகா விளக்கமளித்துள்ளார்.
ஆம் ஆத்மிக்கு எதிராக பாலியல் புகார் அளிக்கப் பட்ட காவல் நிலையம் முன்பு அக்கட்சித் தொண்டர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.