கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க மோடியின் நண்பர் ரூ30 கோடி பேரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பகீர் புகார்
டெல்லி: டெல்லி கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க தம்மிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ரூ30 கோடி கொடுக்க முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மதன் லால் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலரை சேர்த்துக் கொண்டு அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மதன் லால் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அருண் ஜேட்லியுடன் சந்திப்புக்கு..
கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதியன்று பகல் 12.34 மணிக்கு இண்டர்நேஷனல் எண்ணில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. அந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் என்னை அருண் ஜேட்லியுடன் சந்திக்க வைக்க விரும்புவதாக கூறினார்.
மோடிக்கு நெருக்கமான நபர்..
10 நாட்கள் கழித்து மற்றொரு நபர் என்னை சந்தித்து பேசினார். அவர் என்னிடம், நான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவன்.
9 எம்.எல்.ஏக்கள்.. சிஎம் பதவி கன்பார்ம்
உங்களுடன் 9 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு வெளியே வர முடியுமானால் உங்களை டெல்லி முதல்வராக்குகிறேன்.
ரூ30 கோடி பேரம்
இதற்காக உங்களுக்கு ரூ20 கோடி முதல் ரூ30 கோடி வரை கொடுக்க தயராக இருக்கிறேன்.
தலா ரூ10 கோடி
மற்ற எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ10 கோடி தர இருக்கிறேன் என்று கூறினார். இந்த உரையாடலை நான் பதிவு செய்யவில்லை... ஆனால் இது உண்மை.
இவ்வாறு மதன் லால் புகார் கூறினார். ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ. ஒருவர் பகிரங்கமாக பாஜகவின் பேரம் பற்றி புகார் தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications