ஸ்டிங் ஆபரேஷனில் திணறும் ஆம் ஆத்மி.. தேர்தலைவிட்டு ஓட தயாராகும் வேட்பாளர்கள்!!
டெல்லி: ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை சமாளிக்க முடியாமல் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தத்தளித்து வருகிறது. இந்த ஆபரேஷனில் சிக்கிக் கொண்ட பல வேட்பாளர்கள் தேர்தல் களத்தைவிட்டே ஓடிப்போகவும் தயாராக இருப்பதாக அறிவித்திருப்பது அக்கட்சியை கதிகலங்க வைத்திருக்கிறது.
ஊழலுக்கு எதிரான இயக்கம், வலுவான லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா அவசியம் என்று க்ளீன் இமேஜ் பிரசாரத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் ஆம் ஆத்மி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் ராபர்ட் வதேரா, நிதின் கத்காரி என அரசியல் பெருந்தலைகளின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.

அத்துடன் டெல்லி மாநில சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார். ஊடகங்கள் நடத்திய மாதாந்திர கருத்துக் கணிப்பில் அர்விந்த் கெஜ்ரிவாலின் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலோ ஆட்சியையே பிடித்துவிடுவோம் என்று கனவு காண ஆரம்பித்தார்.
இந்நிலையில்தான் அர்விந்த் கெஜ்ரிவால் தேசவிரோத சக்திகளிடம் இருந்து பணம் பெற்று கட்சியை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மத்திய அரசு அர்விந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கான நிதி குறித்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் புதிய குண்டை கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரே வீசினார்.
ஊழலுக்கு எதிரான இயக்க நிதியை முறைகேடாக அர்விந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தி வருகிறார் என்றும் தமது பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் குற்றம்சாட்ட ஆடிப்போனார் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி கட்சியினரை கதிகலங்க வைக்கும் வகையில் ஊடகங்கள் ஸ்டிங் ஆபரேஷன்களை நடத்தி அம்பலப்படுத்தி வருகின்றன.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள், தங்களுக்கு நிதி கொடுப்போரைப் பற்றி விசாரிக்காமலேயே பணம் வாங்குவதை அப்படியே படம் பிடித்து சிடிக்களாக போட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றன. இதனால் கெஜ்ரிவால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.
இப்படி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் மனோஜ் குமார், தினேஷ் மொகானியா, இர்பான் உல்லா கான், முகேஷ் ஹூடா, பிரகாஷ், பவானா கவுர், ஷாஸியா லிமி என பலரும் சிக்கியிருக்கின்றனர். இவர்களில் பலர் இப்போது தேர்தல் களத்தை விட்டே ஓடிப் போகப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி இப்படி ஏடாகூடாமாக சிக்கியிருப்பது கண்டு காங்கிரஸும் பாஜகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. ஆனால் தங்களது கட்சிக்கு எதிராக காங்கிரஸும் பாஜகவும் சதியில் ஈடுபட்டு வருவதாக கதறுகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.
தேர்தல் ஆணையத்திடம் சிடி ஒப்படைப்பு
இதனிடையே ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய நிறுவனத்திடம் ஆம் ஆத்மி கட்சியினர் சிடிக்களை கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்த நிறுவனமோ ஆம் ஆத்மிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக தேர்தல் ஆணையத்திடமே சிடிக்களை ஒப்படைத்துவிட்டது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.
மீண்டு வருவாரா கெஜ்ரிவால்?












Click it and Unblock the Notifications