வாரணாசி பல்கலை. தேர்தல்: வெற்றி பெற்ற காங். மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்றனர்!
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி சமஸ்கிருத பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து என்.எஸ்.யூ.ஐ. மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாரணாசியில் உள்ள சம்பூரானந்த சமஸ்கிருத பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி, காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. இடையே கடும் போட்டி நிலவியது.

மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் என்.எஸ்.யூ.ஐ.வின் சிவம் சுக்லா 709 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஏபிவிபியின் ஹர்ஷித் பாண்டேவுக்கு 224 வாக்குகள்தான் கிடைத்தன.
துணைத் தலைவராக வென்ற சந்தன்குமார் மிஸ்ரா 553 வாக்குகள், பொதுச்செயலாளரான அவ்னிஸ் பாண்டே 487 வாக்குகள், நூலகர் பதவியில் வென்ற ரஜினிகாந்த் துபே 567 வாக்குகளைப் பெற்று வென்றனர். இத்தேர்தல் முடிவுகளை பேராசிரியர் சைலேஷ் குமார் மிஸ்ரா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு துணை வேந்தர் ராஜாராம் சுக்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பின்னர் வெற்றி பெற்ற என்.எஸ்.யூ.ஐ. மாணவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications