சிகிச்சைக்கு பணமில்லை... மீண்டும் ‘வாழ்க்கை’ ஆபர் தந்த ஆசிட் வீசிய கணவர்... மனைவி வழக்கு வாபஸ்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் தன் முகத்தில் ஆசிட் வீசிய தனது கணவருடனே மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே ஆசிட் வீச்சு சம்பவங்களில் மேற்குவங்க மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இதேபோல், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதில் அம்மாநிலம் பின்தங்கியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 29 ஆசிட் வீச்சு சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளது

இந்நிலையில், திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணைக் கொடுமைக் காரணமாக கணவரே மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வழக்கு ஒன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கணவருக்கு எதிராக ஆசிட் வீச்சுக்கு ஆளான மனைவி சாட்சி கூற வந்திருந்தார். சாட்சிக் கூண்டில் ஏறிய அப்பெண், அதிரடியாக, ‘தான் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என்றும், கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' எனத் தெரிவித்தார்.
அப்பெண் இந்த திடீர் மனமாற்றத்தை எதிர்பார்க்காத வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அப்பெண்ணின் விருப்பப்படியே இனி இருவரும் சேர்ந்து வாழலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அப்பெண்ணுக்கு உரிய இழப்பீடு கூடிய விரைவில் வந்து சேரும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை மட்டுமே, சம்பவம் நடந்தபோது மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது. ஆனால் அவரின் முகம் முற்றிலுமாக சிதைந்துள்ளது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் மருத்துவச்செலவுகளை சமாளிக்க அவரது பெற்றோர்களால் இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கை வாபஸ் பெற்றால் மீண்டும் சேர்ந்து வாழலாம் என நண்பர்கள் மூலம் தூது விடுத்துள்ளார் அப்பெண்ணின் கணவர்.
எனவே, மேலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல், ஆசிட் வீசிய கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அப்பெண் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications