ஜெ. தீர்ப்பு எதிரொலி: கர்நாடக ஹைகோர்ட்டை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உதவி கமிஷனர் ஷோபா ராணி தலைமையில், ஹைகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க ஹைகோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது பெங்களூர் காவல்துறை.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா அப்பீல் மனு மீது நாளை மறுநாள் கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க உள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட், பெங்களூரு நகரின் மையப் பகுதியில் உள்ளது. கர்நாடக மாநில தலைமைச் செயலகமான விதானசவுதா, போலீஸ் கமிஷனர் அலுவலகம், பெங்களூர் பத்திரிகையாளர் மன்றம், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றில் இருந்து வெகு அருகில்தான் ஹைகோர்ட் அமைந்துள்ளது.
இவ்வளவு முக்கியமான பகுதியில் ஹைகோர்ட் அமைந்துள்ளதால், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்போது, குவியும் அதிமுகவினரை கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறைக்கு மிகுந்த அவசியமாகிறது.
எனவே, ஹைகோர்ட் அமைந்துள்ள பெங்களூர் மத்திய மண்டல காவல் ஆணையத்தின், கப்பன்பார்க் சப்-டிவிஷன் உதவி கமிஷனரான ஷோரா ராணியை, ஹைகோர்ட் பாதுகாப்புக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு்ள்ளார்.
மேலும், ஹைகோர்ட் அமைந்துள்ள பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.
தடையுத்தரவு உள்ள பகுதிகளில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக சேர முடியாது. எனவே, தீர்ப்பு பாதகமாக வந்தால் தர்ணா நடத்தவோ, சாதகமாக வந்தால், கொண்டாட்டம் நடத்தவோ முடியாது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications