அரசியலில் இன்னொரு ஜெயலலிதாவா? நடிகை நக்மா பேட்டி
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் நடிகை நக்மா தீவிர அரசியலில் இன்னொரு ஜெயலலிதாவாக உருவெடுப்பாரா? என்பதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கப்பட்டுள்ளார் நடிகை நக்மா. 39 வயதாகும் நடிகை நக்மா தமது அரசியல் பயணம் குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

அரசியலிலில் ஈடுபடுவது என்பது ஒருநாள் இரவில் எடுத்த முடிவு அல்ல. 2003ஆம் ஆண்டே அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். நாட்டில் படித்த அனைத்து தரப்பு மக்களுமே மாற்றத்தைக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் 2004ஆம் ஆண்டு நான் இணைந்தேன். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும் 2004ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சியில் எனது பணிகளைத் தொடங்கிவிட்டேன்.
மீரட் தொகுதியைப் பொறுத்தவரை இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புதான் பிரச்சனை. அதே போல் விவசாயிகளுக்கும் ஏராளமான பிரச்சனைகள் உண்டு. சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

திரைப்பட நடிகர்- நடிகைகள் அரசியலுக்கு வரும்போது ஒருவித சந்தேகத்துடன்தான் பார்க்கின்றனர். ஆனால் திரைத்துறையில் வந்த ஜெயலலிதா, கருணாநிதி, சிரஞ்சீவி, சத்ருஹன் சின்ஹா, ஜெயப்பிரதா ஆகியோர் அரசியலில் சிறப்பாகத்தானே செயல்படுகின்றனர்? அரசியலில் மாற்றத்தை விரும்பும் நாங்கள் இளைஞர்களை, படித்தவர்களை அழைக்கிறோம்..
நான் அரசியலில் இன்னொரு ஜெயலலிதாவாக உருவெடுப்பேனா? என்பது மிகப் பெரிய விஷயம்... அதுபற்றி இப்போது சிந்திப்பது என்பதே மிகவும் முன்கூட்டியே கருத்து சொல்வதாகும். ஆனால் அரசியலில் மிகக் கடுமையாக பணியாற்ற முடிவு செய்து உள்ளேன்.
இவ்வாறு நடிகை நக்மா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications