'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்
கொல்கத்தா: நேதாஜி பிறந்தநாள் விழாவில், ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜி பேசாமல் வெளியேறிய விவகாரத்தில், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
கொல்கத்தாவில் ஜன.23 அன்று நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு, பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்த போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த மம்தா, "இது அரசு நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு இதுப்போன்று நடப்பது சரியல்ல" என்று கூறி விழாவில் பேச மறுத்துவிட்டார்.
ரஞ்சன் சௌத்ரி ஆதரவு
இந்தச்சம்பவம் குறித்து மம்தாவுக்கு மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆதரவு தெரிவித்துள்ளார். மம்தாவை கடுமையாக எதிர்க்கும் தலைவர்களில் ஒருவரான அதிர் ரஞ்சன், இந்த விவகாரத்தில் மம்தாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்த ஆதரவு அறிகுறி மூலம் மேற்குவங்கத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கு என்னவாக இருக்கும் என்பதையும் யூகிக்க வைக்கிறது.
ராகுலின் வியூகம்
தமிழகத்தில் தற்போது குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்திக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் உள்ளது. இதன் மூலம், அவர் மறைமுகமாக திமுகவுக்கு 'காங்கிரஸின் செல்வாக்கை' உணர்த்த முற்படுவதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தவிர, வரும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு கணிசமான சீட்களை திமுக ஒதுக்கியே ஆக வேண்டும் என்றும், சீட்களை வேண்டுகோள் விடுத்து கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதை கூட்டணி கட்சியான திமுகவுக்கு உணர்த்தும் நோக்கில் ராகுலின் தமிழக விசிட் உள்ளதாகவும் கருதப்படுகிறது.
மேற்குவங்கத்தை குறிவைக்கும் ராகுல்
அடுத்ததாக ராகுல் மேற்கு வங்கத்திற்கு தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அங்கு பாஜக எந்தெந்த இடங்களில் வலிமையாக இருக்கிறதோ அல்லது எந்தெந்த மக்களவை தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறதோ அங்கெல்லாம் ராகுல் தனது கால் தடத்தை பதிக்கும் திட்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுலின் பயணத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் இடங்களும் இடம் பெறலாம் என்றாலும், அக்கட்சியை ராகுல் அதிகம் விமர்சிக்கமாட்டார் என்று தெரிகிறது.
ராகுல் லாஜிக்
மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்கொள்ள, இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம். ஆனால், அப்படி ஒருவேளை கூட்டணி வைத்து அதனால் மம்தா தோற்றால், அது பாஜகவுக்கு தான் சாதகமாக முடியும் என்பதை காங்கிரஸ் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.
திரிணாமூல் காங்கிரஸின் தோல்வி பாஜகவுக்கு அதன் திட்டங்களை நிறைவேற்ற பெரும் ஊக்கமாக அமைந்துவிடும். ஏனெனில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை மம்தா மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார். அப்படிப்பட்ட மம்தாவே தோற்றால், பாஜகவை எதிர்க்கும் இதர கட்சிகள் நம்பிக்கையிழந்து போய்விடும் என்று காங்கிரஸ் எண்ணுகிறது.
அச்சுறுத்தும் ஓவைசி
காங்கிரசும், திரிணாமூல் காங்கிரசும் மோதினால் அது பாஜகவையே வலுப்படுத்தும். அதுமட்டுமின்றி, ஓவைசி வருகையும், மம்தாவுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் ஆகப்பெரும் பலமான சிறுபான்மையினரின் வாக்குகளை அவர் சிதறடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தவிர, முர்ஷிதாபாத்தில் அதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளையும் ஓவைசி பிரிக்க வாய்ப்புள்ளது.
மிகப்பெரிய எதிரியான பாஜகவை வீழ்த்துவது தான், தாங்கள் ஜெயிப்பதை விட முக்கியமான பணி என்பதை காங்கிரசும், திரிணாமூல் காங்கிரஸும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.