புதிய கடற்படை தளபதி ராபின் தோவான் நியமனத்துக்கு எதிர்ப்பு- மூத்த அதிகாரி போர்க்கொடியால் பரபரப்பு!!
டெல்லி: நாட்டின் புதிய கடற்படை தளபதியாக ராபின் தோவானை மத்திய அரசு நியமித்ததற்கு கடற்படையின் மூத்த அதிகாரி சேகர்குமார் சின்ஹா கடும் எதிர்ப்பு போர்க்கொடி தூக்கியுள்ளார்.
மும்பை நீர்மூழ்கிக் கப்பல் விபத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கடற்படை தளபதி பதவியில் இருந்து டி.கே. ஜோஷி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் இடைக்கால கடற்படை தளபதியாக ராபின் தோவான் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ராபின் தோவானையே புதிய கடற்படை தளபதியாகவும் மத்திய அரசு நியமிக்க அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மேற்கு கடற்படை காமாண்டரான வைஸ் அட்மிரல் சேகர்குமார் சின்ஹா இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ராபின் தோவானை விட 6 மாதம் மூத்தவரான தம்மைத்தான் புதிய தளபதியாக மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ராபின் தோவானை நியமித்தது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேகர்குமார் சின்ஹா விருப்ப ஓய்வில் செல்லவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.