ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சரிடம் மனு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அதிமுக எம்பிக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் எம்பிக்கள் அமைச்சரை சந்தித்தினர்.
டெல்லி: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கோரி லோக் சபா துணை சபாநாயகர் தலைமையில் அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தேவ்விடம் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இளைஞர்கள் பேரணி நடத்தி அசத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் மனு ஒன்றை சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ்விடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தம்பிதுரை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்வதாக பல முறை மத்திய அரசு உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் உறுதியளித்தார். ஆனால், நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு இருப்பதால், நீதிமன்ற உத்தரவு என்ன என்பதைப் பொருத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று அமைச்சர் அனில் மாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.