ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 'நோ சான்ஸ்'.. விரக்தியில் 'எமர்ஜென்சி' அணுகுண்டுவை வீசினார் அத்வானி?
டெல்லி: இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்சி வந்துவிடும் நிலை இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கொளுத்திப் போட்டுள்ளார். இது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அத்வானியின் இந்த கடுமையான விமர்சனத்துக்கு காரணமே தம்மை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தாது என்ற விரக்திதான் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.
நாட்டில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்தார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு வரும் 25-ந் தேதியுடன் 40 ஆண்டுகள் நிறைவு அடைகிறது.
அந்த நெருக்கடி நிலை காலத்தில் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நெருக்கடி நிலையின் 40வது ஆண்டையொட்டி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த எல்.கே. அத்வானி, நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி வராது என நான் சொல்ல மாட்டேன் எனக் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியை குறி வைத்தே?
நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது முதலே அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தவர் அத்வானி.. அதனால் மோடி அரசாங்கம் எமர்ஜென்சியை கொண்டு வரும் என்றே அத்வானி குறிப்பிட்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

பாஜக விளக்கம்
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, அத்வானி அப்படி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.. பொதுவாகத்தான் கூறியிருக்கிறார் என்று வியாக்யானம் கூறி வருகிறது. இந்த நிலையில் அத்வானியின் இந்த விமர்சனத்துக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்
அதாவது மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை; அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தவர்; அதனால் அவர் பிரதமருக்கு கீழே பணியாற்றுவது சரியாக இருக்காது என்று கூறப்பட்டது. அத்துடன் அத்வானியை 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தவும் முரளி மனோகர் ஜோஷியை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது; இதனால்தான் அத்வானிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

விரக்தியில் அத்வானி?
இது அப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாதமாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பாரதிய ஜனதாவில் அத்வானி ஓரங்கட்டப்பட்டே இருக்கிறார். பா.ஜ.க.விலும் வழிகாட்டு குழு என்கிற 'முதியோர்' அமைப்பில்தான் அத்வானிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியில் மோடி- அமித்ஷா அணியின் கை ஓங்கியும் இருக்கிறது.
இதனால் நிச்சயம் தம்மை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தாது என்று அத்வானி நம்பிக்கை இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் மோடி அரசு எமர்ஜென்சியை கொண்டு வரலாம் என மறைமுகமாக அத்வானி கருத்து தெரிவித்து இருக்கிறார் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்..












Click it and Unblock the Notifications