மிசோரமில் பரவும் "ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்".. மனிதர்களுக்கும் பாதிப்பா? என்ன நடக்கிறது?
அய்சால்: மிசோரம் மாநிலத்தில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (ஏஎஸ்எப்) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்து கால்நடைத்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டது. இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் இறந்தன.
இந்த பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

மீண்டும் பாதிப்பு
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு புதிதாக தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகளின் இறப்புக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பாய் நகர் அதனை சுற்றிய பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டன. இதுதவிர மிசோரம், மணிப்பூர் எல்லையில் உள்ள சகவர்தாய் கிராமத்திலும் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம தலைவர் சங்கதன்குமா கூறுகையில், ‛‛இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன'' என கூறியுள்ளார்.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்
இதனால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து அம்மாநில கால்நடை பாராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் லால்மிங்தங்கா கூறுகையில், ‛‛சில கிராமங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பால் பன்றி இழப்பு பதிவாகி உள்ளது'' என்றார். இருப்பினும் பன்றிகளின் இறப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுதொடர்பாக இன்று அம்மாநில தலைமை செயலாளர் ரேணு ஷர்மாவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முழுவிபரங்கள் வெளிவர உள்ளது.

மனிதர்களுக்கு பாதிப்பா
இந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், அதேநேரத்தில் இது பன்றிகளை அதிகமாக கொன்றுவிடும் எனவும் கால்நடைத்துறை கூறுகிறது. இதனால் மிசோரம் மாநில கால்நடைத்துறையினர் அதிக கவனம் செலுத்தி தடுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

10,910 பன்றிகள் அழிப்பு
முன்னதாக கடந்த ஆண்டில் மட்டும் மிசோராம் மாநிலத்தில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் ஆப்பரிக்கன் பன்றிக்காய்ச்சலால் இறந்தன. இதற்கு ரூ.60.82 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கையாக 10,910 பன்றிகளும் அழிக்கப்பட்டன. இந்த பேரிழப்புக்கு வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள் தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது வங்கதேச எல்லையில் உள்ள தெற்கு மிசோரமின் லுங்கேய் மாவட்டம் லுங்சென் கிராமத்தில் தான் 2021 மார்ச் 21ல் முதல் முதலாக ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பதிவானது. அதன்பிறகு இது வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications