பழைய சண்டைகள் ஒருபுறம்... புதிதாக ‘மாம்பழ’ சண்டை போட்டுக் கொள்ளும் மஞ்சி - நிதிஷ்!
பாட்னா: பீகாரில் அரசு மாளிகையின் தோட்டத்தில் காய்க்கும் மாம்பழங்களைப் பறித்து உண்ணவிடாமல் நிதிஷ் அரசு போலீசாரை நியமித்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் மஞ்சி. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிதிஷ்குமார் மறுத்துள்ளார்.
பீகார் முதல்வருக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட மாளிகை பாட்னாவில் உள்ள 1, அண்ணே மார்கில் அமைந்துள்ளது. தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து அந்த மாளிகையிலேயே வசித்து வருகிறார் ஜிதன்ராம் மஞ்சி.

இந்த மாளிகையைச் சுற்றியுள்ள தோட்டத்தில் நூற்றுக்கணக்கான மாமரங்களும், லிச்சி மரங்களும் உள்ளன. அந்த மரங்களில் விளையும் பழங்களைப் பறித்து உண்ணவிடாமல், தன்னையும் தன் குடும்பத்தாரையும் நிதிஷ் அரசு தடுப்பதாக மஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, பாட்னாவில் அவர் கூறுகையில், ‘மாளிகையில் வசிக்கும் நபர், தன்னுடைய வளாகத்திலுள்ள மரங்களில் விளையும் பழங்களை உபயோகிக்க முடியாது என்பது விசித்திரமாக உள்ளது. எனது குடும்பத்தினருக்காக, தோட்டத்திலிருந்து மாம்பழங்களைப் பறித்த தோட்டக்காரர் ஒருவர் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தோட்டத்தில் காவலுக்காக 24 போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை, வேறு இடங்களில் பணியமர்த்தி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
மாஞ்சியின் குற்றச்சாட்டு குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் புன்னகைத்தவாறே கூறியதாவது :-
இது அற்ப விஷயம். எனினும், இதுகுறித்து காவல்துறை தலைவரிடம் விசாரித்துள்ளேன்.
பீகாரின் முன்னேற்றத்திற்காக, நான் பாடுபட்டு வருகிறேன். சிலரின் முழுக்கவனமும் மாம்பழங்களையும், லிச்சி பழங்களையும் உண்பதில் இருக்குமானால், மாஞ்சி தங்கியிருக்கும் மாளிகையில் விளையும் அனைத்துப் பழங்களையும் அவருக்கே பறித்துத் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுக் கொள்வேன்.
அந்தப் பழங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று விதிகள் கூறுமானால், எனது ஊதியத்தில் இருந்து பணத்தைச் செலுத்துவேன்' என்றார்.












Click it and Unblock the Notifications