மோடி விமானத்தில் கிடந்தது ‘பாம்’ இல்லை... பாதுகாப்பு ஒத்திகை என்கிறது ஏர் இந்தியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணத்திற்காக பயன்படுத்தப்பட இருந்த மாற்று விமானத்தில் செயலிழந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ஏர் இந்தியா மறுத்துள்ளது. அது பாதுகாப்பு ஒத்திகை என ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 25ந் தேதி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது மும்பை-ஐதராபாத்-ஜெட்டா நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமானத்தை மாற்று விமானமாக பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டு அதன் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி நாடு திரும்பி விட்டதால், அவரது பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா மாற்று விமானம் மீண்டும் தனது சேவைகளை வழக்கம் போல தொடங்கியது.

நேற்று முன்தினம் ஜெட்டாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்த ஏர்-இந்தியா போயிங் 747-700 ஜம்போ விமானம் சென்றது. அப்போது ஏர் இந்தியா குழுவினரால் செயலிழந்த நிலையிலான 'கிரேனைட்" வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தற்போது அந்த விமானம் ஜெட்டாவில் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ஏர் இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘போயிங் 747 ரக விமானம் பிரதமருக்கான மாற்று விமானமே கிடை யாது, மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்த விமானம் டெல்லியில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு சென்று வந்திருக்கிறதாம். அதோடு, விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கையெறி குண்டல்ல, வெறும் சுருட்டப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர் என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதிப்பதற்கான பயிற்சியாக விமானத் தில் பிளாஸ்டிக் பேப்பர்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட அந்த பேப்பர்தான் ஜெட்டா விமான நிலையத்தில் சிக்கியிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லாத வகையில் ஏர் இந்தியா செயல்படுகிறது' எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், ‘விமான நிலையத்திலும், விமானத்திலும் ஊழியர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்கின்றனர் என்பதை அறிய தேசிய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ஒத்திகை எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னுக்குப் பின் முரணாக இவ்வாறு வெளியாகும் தகவல்களால் ஏதோ முக்கியத் தகவல் மூடி மறைக்கப் படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications